Blogger news

Saturday 18 April 2015

கோடையில் எந்தப் பழங்களைச் சாப்பிட வேண்டும்? - டாக்டர் கு.கணேசன்

கோடையில் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டிய சில இயற்கை உணவு வகைகளும், அவை தரும் பலன்களும்:  
 
உற்சாகம் ஊட்டும் இளநீர் 
 
கோடைக் காலத்தில் காபி, டீ மற்றும் செயற்கைக் குளிர்பானங்களை அதிகமாகக் குடிப்பதால் பணத்தை இழப்பது மட்டுமல்ல உடலையும் கெடுத்துக்கொள்கிறோம். மென்பானங்களைக் குடிப்பதால் வெயில் காலத்தில் ஏற்படுகிற சிறுநீர் கல் தொல்லை அதிகப்படும். இவற்றில் உள்ள செயற்கை சர்க்கரை உடல் பருமனுக்கு வழிவகுக்கும். கவர்ச்சி வண்ணங்களுக்காக இவற்றில் கலக்கப்படும் சில வேதிப்பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கும். எனவே, இயற்கை தந்திருக்கும் வரமான இளநீர் இருக்க, மென் பானங்களை நாடி செல்ல வேண்டிய அவசியமே இல்லை.
இளநீரில் குளுக்கோஸ், வைட்டமின்கள், தாதுச் சத்துகள், அமினோ அமிலங்கள், கால்சியம், சைட்டிகைனின் என்று பலவிதச் சத்துகள் உள்ளன. இளநீரைக் குடித்தவுடன் தாகம் குறைந்துவிடும் என்பது மட்டுமல்லாமல் உடல் புத்துணர்ச்சி அடையும் என்பதும் உறுதி. இளநீரில் பொட்டாசியத்தின் அளவு அதிகம் என்பதால், இதய நோயாளிகளுக்கும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இது நல்லதொரு கோடை நீராகாரம். நல்ல கட்டுப்பாட்டில் உள்ள நீரிழிவு நோயாளிகளும் கோடையில் தினமும் இரண்டு இளநீர் பருகலாம். இதில் துத்தநாகம், மாங்கனீஸ் தாதுகள் அதிகமாக இருப்பதால் கோடையில் தோல் வறட்சி அடைவது தடுக்கப்படும். 

நன்மை தரும் நுங்கும் பதநீரும்
 
கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை வாரி வழங்குவதில் நுங்கும் பதநீரும் முக்கியப் பங்காற்றுகின்றன. உடல் வெப்பத்தைக் குறைக்கிற பல தாதுகள் இந்த இரண்டிலும் கலந்திருக்கின்றன. இவற்றில் உள்ள தண்ணீர்ச் சத்து வயிற்றையும் நிரப்பும்; பசியையும் தூண்டும். சிலருக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. இவர்கள் நுங்கு சாப்பிட்டால் தாகம் அடங்கிவிடும். கோடையில் நீரிழப்பு காரணமாகப் பலருக்கு மலச்சிக்கல் ஏற்படுவது வழக்கம். இவர்கள் தினமும் ஒரு நுங்கும் பதநீரும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் மறையும். நுங்கும் பதநீரும் செலவு குறைந்த கோடை உணவு என்று சொன்னால் மிகையில்லை. 

சிட்ரஸ் பழங்கள் 
 
திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவற்றைச் சிட்ரஸ் பழங்கள் என்கிறோம். இவற்றில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருப்பதே, இப்படி அழைக்கப்படுவதற்குக் காரணம். இந்தச் சத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. கோடையில் முதியவர்களும் குழந்தைகளும் அதிக நேரம் வெயிலில் அலைந்தால் மயக்கம் அடைவது வழக்கம். இவர்களுக்குப் பொதுவாகவே நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதும் இதற்கு ஒரு காரணம். எனவே, இந்த வயதில் இருப்பவர்கள் தினமும் நெல்லிக்காய், திராட்சை அல்லது ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். எலுமிச்சை, நன்னாரி கலந்த சர்பத் அருந்திவந்தால், உடல் குளிர்ச்சி அடையும். சிறுநீர் அதிகமாகப் போகும். இவற்றில் உள்ள குளுக்கோஸ் உடனடியாக ரத்தத்தில் கலந்துவிடும் என்பதால், விரைவிலேயே உடல் சோர்வு மறைந்து புத்துணர்வு கிடைக்கும். 

பழங்கள் தரும் பொதுவான பலன்கள் 
 
பழங்கள் கோடைக் காலத்தில் மட்டுமல்ல எல்லாப் பருவத்திலும் நமக்கு நன்மை தருகின்றன. நம் உடலுக்குத் தேவைப்படுகிற பலவிதச் சத்துகளைக் குறைந்த செலவில் அள்ளித்தருவது பழங்களே. பழங்களில் நார்ச் சத்து அதிகமாகவும், கொழுப்புச் சத்து குறைவாகவும் உள்ளது. இதனால் உடல் பருமன் தடுக்கப்படும்; செரிமானக் குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாது. பப்பாளி, கொய்யா, பலாப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லி போன்றவற்றில் உள்ள வைட்டமின்-சி சத்து சளித் தொல்லையிலிருந்தும் விடுவிக்கிறது. எலும்பு மூட்டுகளில் ‘கொலாஜன்’ என்ற புரத உற்பத்திக்கு உதவுகிறது; இதனால் மூட்டுவலி தடுக்கப்படுகிறது.
நாவல் பழத்தில் உள்ள ‘ஜம்போலின்’ எனும் குளுக்கோசைடு ரத்தச் சர்க்கரையைக் குறைத்து நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது. பேரீச்சம்பழத்தில் உள்ள இரும்புச் சத்து ரத்தசோகையைக் குணப்படுத்துகிறது.
வாழை பழம், கிர்ணிப் பழம், சாத்துக்குடி போன்றவற்றில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிறது. பப்பாளி மற்றும் மாம்பழத்தில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் பார்வையைப் பாதுகாக்கிறது. மாலைக்கண் நோயைச் சரிசெய்கிறது. பல்வேறு பழங்களில் உள்ள ‘ஆன்டி ஆக்சிடன்ட்’கள் புற்றுநோய் வருவதைத் தடுக்கின்றன. எனவே, ஒரு நாளைக்கு 300-லிருந்து 500 கிராம்வரை பழங்களைச் சாப்பிடுவது நல்லது. 

சாப்பாட்டுக்கு முன்பா? பின்பா? 
 
உணவோடு பழங்களைச் சேர்த்துக்கொள்வதே நம்மில் பலருக்குப் பழக்கம். ஆனால், பழங்களைத் தனி உணவாகக் கருத வேண்டும் என்கிறது நவீன மருத்துவம். பழங்களை உணவுக்குச் சற்று முன்பு அல்லது உணவைச் சாப்பிட்டவுடன் சாப்பிடுவதைவிட, தனித்து அதையே உணவாகக் கருதிச் சாப்பிடுவதே சிறந்த முறை. அப்போதுதான் உணவுச் செரிமானத்தில் பிரச்சினை வராது. உணவு சாப்பிட்டதும் பழம் சாப்பிட்டால், ஏற்கனவே இரைப்பையில் இருக்கும் உணவு செரிமானம் ஆவதற்காகக் காத்திருக்காமல், முன்கூட்டியே இது செரிமானமாகிவிடும். அதற்குப் பிறகுதான் உணவில் உள்ள மற்றச் சத்துகள் கிரகிக்கப்படும். இதனால் சிலருக்கு குறிப்பாக அல்சர் உள்ளவர்களுக்கு - ஏப்பம், வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்துப் பழம் சாப்பிட்டால், இது தவிர்க்கப்படும். 

தோலோடு சாப்பிடுங்கள்! 
 
பொதுவாகவே பழங்களைச் சாப்பிடத் தொடங்கும்போது நாம் முதலில் செய்யும் வேலை, பழத்தின் தோலை நீக்குவதுதான். தோல் என்றாலே தேவையற்றது என்று நம் மனதில் பதிந்து போனதன் விளைவு இது. பல பழங்களில் அவற்றின் உட்பகுதியைவிட, தோலில்தான் அதிகச் சத்துகள் இருக்கும். குறிப்பாகச் சப்போட்டா, மாம்பழம், திராட்சை, கொய்யா, ஆப்பிள், சாத்துக்குடி போன்ற பழங்களின் தோலில் அதிக நார்ச்சத்து இருக்கிறது. இவற்றைத் தோலோடு சாப்பிடுவதுதான் நல்லது. பழங்களைப் பிழிந்து, வடிகட்டி, சாற்றை மட்டும் குடிக்கும்போது நார்ச்சத்து இழக்கப்படும். தவிரப் பழங்களைச் சாறாக்கி, பால், சர்க்கரை, குளுக்கோஸ் சேர்த்துக் குடிக்கும்போது, அதில் சேர்க்கப்படும் சர்க்கரையும் பாலும் பழத்தில் இருக்கிற சத்துகளின் இயல்பையே குலைத்துவிடும். செரிமானக் கோளாறையும் ஏற்படுத்திவிடும். எனவே, பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது, 

- கட்டுரையாளர், பொது நல மருத்துவர்.

தினத்தந்தியின் ‘ஆங்கிலம் மிக அவசியம்’ - பகுதி - 31


தினத்தந்தியின் ‘ஆங்கிலம் மிக அவசியம்’ - பகுதி - 30


தினத்தந்தியின் ‘ஆங்கிலம் மிக அவசியம்’ - பகுதி - 25


தினத்தந்தியின் ‘ஆங்கிலம் மிக அவசியம்’ - பகுதி - 24


Tuesday 17 February 2015

'ஸ்கெட்ச்', வண்ண பென்சில்களால் விடைத்தாள்களில் எழுதக் கூடாது: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தல்

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்களில் "ஸ்கெட்ச்', வண்ண பென்சில்களால் எழுதக் கூடாது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கம் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

அதன் விவரம்: விடைத்தாள் முகப்புச் சீட்டில் உரிய இடத்தில் மாணவர்கள் கையொப்பமிட வேண்டும். விடைத்தாளில் ஒரு பக்கத்துக்கு 20 முதல் 25 வரிகள் வரை எழுத வேண்டும். விடைத்தாளின் இருபுறத்திலும் எழுத வேண்டும்.

விடைகள் தொடர்பான அனைத்துக் கணக்கீடுகளும் விடைத்தாள் பக்கத்தின் கீழ்ப்பகுதியில் இடம்பெற வேண்டும். வினா எண்ணை தவறாமல் எழுத வேண்டும். விடைத்தாளில் நீலம், கருப்புமை கொண்ட பேனாவால் விடைகளைத் தெளிவாக எழுத வேண்டும். விடைத்தாளில் எழுதாத பக்கங்களில் குறுக்குக்கோடு இட வேண்டும்.

மாணவர்கள் செய்யக் கூடாதவை: வினாத்தாளில் எந்தவிதக் குறியீடும் இடக்கூடாது. விடைத்தாளை சேதப்படுத்தக் கூடாது. விடைத்தாளில் எந்த ஒரு பக்கத்திலும் தேர்வு எண், பெயரை எழுதக் கூடாது. "ஸ்கெட்ச்', வண்ண பென்சில்களைப் பயன்படுத்தி எழுதக் கூடாது. விடைத்தாள் புத்தகத்தின் எந்தத் தாளையும் கிழிக்கவோ, நீக்கவோ கூடாது ஆகிய அறிவுரைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

Sunday 8 February 2015

வருமான வரி கணக்கீட்டுப் படிவங்கள் - MS OFFICE 2010 EXCEL

இம்ப்ரூவா, இம்ப்ரொவைஸா? :ஆங்கிலம் அறிவோமே - 42



முதலில் adjective என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வோம் (அல்லது வேகமாக ஒரு ரிவிஷன் செய்துவிடுவோம்).
Adjective என்பது ஒரு வார்த்தையை விளக்கும் பகுதி. அதாவது noun ஆக இருக்கும் ஒரு சொல் குறித்த விவரிப்பு இது.
It is a ---------- idea. கோடிட்ட இடத்தில் என்ன வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்துவீர்கள் என்று யோசியுங்கள்.
Good? Nice? Fabulous?
இப்படி எந்த வார்த்தையாக இருந்தாலும் அது adjective.
Truth என்பது noun. True என்பது adjective.
He speaks truth. This is a true statement.
Decency ​என்பது noun. Decent என்பது adjective.
Adjective என்பது அளவைக் குறிப்பதாகவும் இருக்கலாம். He spent all money என்பதில் ‘all’ adjectiveதான். He spent no money என்றோ, He spent some money என்றோ குறிப்பிட்டால் அந்த வாக்கியங்களில் உள்ள ‘no’ ‘some’ ஆகிய வார்த்தைகள்கூட adjectivesதான்.
I ate two mangoes என்ற வாக்கியத்தில் mangoes என்ற ​noun-ஐ (எவ்வளவு என்று) விவரிக்கிறது two என்ற வார்த்தை. இந்த விதத்தில் two என்பது adjectiveதான்.
One, two, three போன்றவை numbers என்பது நமக்குத் தெரியும். ஆனால் first, second, third போன்றவை ​numbers அல்ல. அவை ordinals. (எண்களை numbers என்று மட்டுமல்ல cardinals என்றும் குறிப்பிடுவார்கள்).
Ordinalsகூட adjectiveதான் என்பதற்காக அதை இங்கு குறிப்பிட்டேன் The first man to climb the Everest என்ற வாக்கியத்தில் ‘first’ என்பது adjective. Man எனும் noun குறித்து அது (எத்தனையாவது மனிதன் என்று) விவரிக்கிறது.
இந்த இடத்தில் லேட்டாக வந்தாலும், லேட்டஸ்ட்டாகவும், சுவையாகவும் வந்துள்ள ஒரு வாசகர் கடிதத்தைக் குறிப்பிடுவதுதான் நியாயம்.
“What is your ordinal as a child to your ​parents?” இப்படிக் குறிப்பிடலாமே என்கிறார் அவர். (“உன் பெற்றோருக்கு நீ எத்தனையாவது குழந்தை?’’ என்பதற்கான மொழி பெயர்ப்பு இது என்பது உங்களுக்கு விளங்கி இருக்கும்). 

IMPROVE - IMPROVISE
 
தொலைக்காட்சி நடனப் போட்டிகளின் சில நடுவர்கள் “அடுத்த தடவை நிறைய ப்ராக்டீஸ் செய்து நல்லா இம்ப்ரொவைஸ் செய்யணும்’’ என்ற ஒரு வாக்கியத்தை அடிக்கடி பயன்படுத்துகின்றனர். இது சரியான பயன்பாடு அல்ல.
Improve என்பது வேறு. Improvise என்பது வேறு.
Improve என்பது முன்னேற்றம் காண்பது. அதாவது மேம்படுத்திக் கொள்வது. கொஞ்சம் திட்டமிட்டு இதைச் செய்ய வேண்டும்.
Improvise என்பது அந்த​ நொடியில் மேம்படுத்துவது. இதில் உடனடிச் செயல்பாடு என்பது முக்கியம். சில பிரபல நகைச்சுவை நடிகர்கள் தங்கள் ஸ்க்​ரிப்டில் இல்லாத வசனங்களையெல்லாம் கூறிக் கைதட்டல் வாங்குவார்கள். அதாவது அந்த நொடியில் அவர்கள் தங்களுக்குத் தோன்றியதைக் கூறி அந்தச் சூழலின் தன்மையை மேம்படுத்துகிறார்கள். இப்படி உடனடியாகச் செய்யப்படும் மேம்பாடுதான் Improvisation.
At? At the rate of?
@ என்பதன் பொருள் என்ன? இது எதற்காக மின்னஞ்சல்களில் தவறாமல் இடம் பெறவேண்டும்?
இந்தக் குறியீட்டை நெதர்லாந்தில் ‘குரங்கு வால்’ என்றும், இத்தாலியில் ‘நத்தை’ என்றும் அழைக்கிறார்கள். 1885-ல் இது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட தட்டச்சுக் கருவிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதற்கு முன்பு பல வருடங்களாகவே இடத்தைக் குறிக்க இது சுருக்கமாகப் பயன்பட்டது. He lived @ Vellore என்பது போல. @ என்பதை எழுதும் ​நேரத்தில் ‘at’ என்றே எழுதியிருக்கலாமே, இதுவா சுருக்கம் என்கிறீர்களா? நியாயம்தான். ஆனால் தட்டச்சு செய்யும்போது ஒரு ஸ்பேஸ் குறைவதுகூடச் சில விஷயங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
மின்னஞ்சல் முகவரி என்பது அந்தத் தகவல் எங்கே அளிக்கப்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது. முதன் முத​லில் இந்த முறை கண்டுபிடிக்கப்ட்டபோது தகவல் அனுப்புபவரின் முகவரி, தகவல் பெறுபவரின் முகவரி இரண்டுக்குமிடையே ஒரு முக்கியமான வித்தியாசம் தேவைப்பட்டது. அதாவது பெறுபவரின் முகவரியிலுள்ள ஒரு எழுத்து அனுப்புபவரின் முகவரியில் மிக நிச்சயமாக இருக்கக் கூடாது. இதற்கு ஒரு தீர்வாகத்தான் @ மின்னஞ்சல்களில் அறிமுகமானது (ஏனென்றால் எண்களோ, எழுத்துகளோ, நிறுத்தக் குறிகளோ அனுப்புபவரின் முகவரியில் இருக்க வாய்ப்பு உண்டு).
@ குறியீட்டுக்குப் பின்னால் இருப்பது தகவல் பெறும் கணினியின் (Host computer) பெயர். @ என்பதற்கு முன்னால் இருப்பது குறிப்பிட்டவரின் தனி அடையாளம்.
தொடர்புக்கு: aruncharanya@gmail.com

அதுவாகவும் அதற்கு எதிரானதாகவும் -ஆங்கிலம் அறிவோமே 41



ஒரே வார்த்தை பல அர்த்தங்களைத் தருவதுண்டு. Book எனும் வார்த்தையும் அவற்றில் ஒன்று. அதை புத்தகம் என்றும் Book me a ticket என்றும் சொல்லலாம். அதாவது கட்டணம் செலுத்தி அனுமதி​யை உறுதி செய்து கொள்ளலாம். கைது செய்வது என்ற அர்த்தத்தில்கூட இது பயன்படுத்தப்படுகிறது. He was booked for murder.
இப்படி ஒரே வார்த்தை பல்வேறு அர்த்தங்களைத் தருவது இயல்புதான். ஆனால் அந்த இரண்டு அர்த்தங்களும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை என்றால் அது பல சிக்கல்களைக் கொடுக்கும் இல்லையா?
எதிர் அர்த்தமும்
“அவர் மாமியார் வீட்டுக்குப் போயிருக்கிறார்’’ என்று ஒருவரைப்பற்றிக் கூறினால் “நியாயம்தானே. மனைவியின் பெற்றோர் வீட்டுக்குப் போவதில் என்ன தப்பு இருக்கிறது” என்று நீங்கள் கருத்து தெரிவிக்கலாம். அல்லது “அடப்பாவி, என்ன தப்பு செய்தானோ!’’ என்று ஆதங்கப்படலாம்.
மாமியார் வீடு என்ற வார்த்தைகள் மரியாதை அளிக்கு​ம் இடம், மரியாதையை நீக்கும் இடம் ஆகிய இரண்டையுமே குறிக்கிறது.
ஆங்கிலத்திலும் இப்படிப்பட்ட நேரெதிர் பொருள் கொண்ட வார்த்தைகள் உண்டு. இவற்றை contronym என்பார்கள்.
Buckle என்றால் இணை என்றும் அர்த்தம் உண்டு. பிரிதல் அல்லது உருவிழத்தல் என்றும் அர்த்தம் உண்டு. Buckle the shoes. He buckled under pressure.
Custom என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றையும் குறிக்கும். ஸ்பெஷலான ஒன்றையும் குறிக்கும். This is an ancient custom. This is a customized shoe.
Dust என்பது ​தூசியைக் குறிக்கிறது. ஆனால் ஒருவரைப் பார்த்து “Dust’’ என்று வேலை ஏவினால் அந்த dust ​தூசியை நீக்குதலைக் குறிக்கிறது.
சாதகமும், பாதகமும்
First Degree என்றால் அது மிக லகுவானதா? அல்லது மிகக் கடுமையானதா? இரண்டும்தான்! First Degree murder என்றால் அது மிகக் கடுமையான விதத்தில் செய்யப்பட்ட கொலை. First Degree burns என்றால் அவை ​மேம்போக்கான ​தீக்காயங்கள். சிகிச்சையில் சரி செய்து விடலாம்.
Overlook என்றால் மேற்பார்வையிடுவது என்றும் அர்த்தம். மேற்பார்வையிடாமல் கவனிக்கத் தவறுவது என்றும் அர்த்தம்.
Fast என்றால் என்ன பொருள்? (விரதம் என்கிற அர்த்தத்தை விட்டுவிடவும்). வேகமாக என்பதுதானே அர்த்தம் என்கிறீர்களா? அப்படியானால் ‘Holding fast’ என்ற வார்த்தைகள் அசையாமல் இருப்பதையல்லவா குறிக்கிறது?
Off என்றால் என்ன பொருள் என்று கேட்டால் நீங்கள் Off ஆகிவிடமாட்டீர்கள். Deactivated என்பதுதான் இதற்கான அர்த்தம் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் ‘The alarm went off’ எனும்போது அந்த அலாரம் செயல்படுகிறது (Activate ஆகிறது) என்றுதான் அர்த்தம்.
Handicap என்பதை சாதகம், பாதகம் ஆகிய இரண்​டையுமே குறிக்கும் வகையில் பயன்படுத்த முடியும்.
“அவர் வயதானவர் என்பதால் Handicap அளிக்கப்பட்டது’’ எனும்போது சமத்துவத்தை நிலைநாட்ட அவருக்குச் சாதகமான ஒரு விஷயம் செயல்படுத்தப்பட்டது என்று அர்த்தம். “தனது Handicap காரணமாகவே அவரால் வெற்றியடைய முடியவில்லை’’ எனும்போது Handicap என்பது ஒரு பாதகமாக விவரிக்கப்படுகிறது.
Quantum என்பதற்குப் பொருள் கணிசமாகப் பெரிய அளவில் இருப்பதுதான். ஆனால் அறிவியல் அறிஞர்களைக் கேட்டால் அது மிகமிகச் சிறிய பகுதியைக் குறிக்கும் ஒரு சொல் என்றும் சொல்வார்கள்.
Left என்றால் பாக்கி இருப்பதா அல்லது வெளி​யேறிவிட்டதா? அடுத்து வரும் வாக்கியத்தில் எந்த Left எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பாருங்கள். Pakistanis have left and Indians are left.
PSEUDO
வாசகர் ஒருவர் “Faux populi’’ என்று அவ்வப்போது நாளிதழ்களில் படிக்கிறேன். இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டிருக்கிறார்?
அது “Vox populi”. இதன் பொருள் மக்களின் குரல் (voice of people).
“Vox pop” என்றால் சாதாரண மனிதன் (R.K.லக்ஷ்மணனின் கார்ட்டூன் கதாபாத்திரம் நினைவுக்கு வருகிறதா?).நண்பர் faux என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கிறார்.
“Vox populiக்கு’’ மட்டுமே மிக மதிப்பளிப்பதாகப் பல அரசியல் வாதிகள் கூறுவதே ஒரு faux செயல்தான்.
Faux மற்றும் pseudo ஆகிய இரண்டு வார்த்கைளுக்குமே “பொய்யான’’ என்ற பொதுவான அர்த்தமும் உ​ண்டு. Faux என்பது பிரெஞ்ச் வார்த்தை.
Faux pearls என்றால் செயற்கை முத்துகள். Faux concern என்றால் செயற்கை அக்கறை.
Pseudo என்றால் உண்மையற்ற என்று அர்த்தம்.
Pseudo என்பது கிரேக்க வார்த்தை. ஆங்கிலம் இதை அப்படியே எடுத்துக் கொண்டிருக்கிறது. 

Pseudonym என்றால் புனை பெயர்.Pseudonym என்ற வார்த்தைக்கு நேர்மையற்ற என்ற அர்த்தமும் உண்டு. Bogus, insincere என்று சொல்லலாம். ஒருவர் அப்படியொன்றும் அறிவாளியாக இல்லாதபோதும்தான் ஒரு பெரும் அறிவாளி என்பதுபோல் எண்ணி நடந்துகொண்டால் அவரை pseudo intellectual என்பதுண்டு.
Bona fide Certificate என்று கேள்விப்பட்டிருப்போம். Bona fide என்பது pseudo அல்லது Faux ஆகியவற்றுக்கு எதிர் பொருளைத் தரக்கூடியது. Bona fide என்றால் நேர்மையான அல்லது நன்னம்பிக்கையில் என்று பொருள். In spite of her simplicity, it is clear that she is a bona fide expert in her field. The Judge assumed that he has acted bona fide.
பெற்றால்தான் பிள்ளையா - இதற்கான ஆங்கில மொழி பெயர்ப்பை “Should one be a biological Parent?” என்று சரியாகவே (அதாவது எனக்குத் தோன்றியப​டியே!) மொழி பெயர்த்திருக்கிறார் ஒரு வாசகர். அதன் முழுஅர்த்தமும் வெளிப்பட வேண்டுமென்றால் “Should one be a biological ​parent to provide parental care?” எனலாம்.
தொடர்புக்கு:
aruncharanya@gmail.com

தன் விவரமா, வாழ்க்கைப் போக்கா? - ஆங்கிலம் அறிவோமே

உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களைப் பற்றி “அவர் ரொம்ப shrewd’’ என்று பேசிக் கொள்கிறார்களா? அப்படியானால் நீங்கள் பாராட்டப்படுகிறீர்கள் என்றுதான் அர்த்தம். உங்களுக்கு நிறைய presence of mind இருக்கிறது. புத்திசாலித்தனம், விழிப்புணர்வு இரண்டும் கொண்டவர் நீங்கள். 

ஆனால் நீங்கள் ஒரு பெண்மணியாக இருந்து யாராவது உங்களை shrew என்று கூறினால் (முன்பு குறிப்பிட்ட வார்த்தையின் கடைசி எழுத்து இல்லை என்பதைக் கவனியுங்கள்) “ரொம்ப தாங்க்ஸ்’’ என்று அசட்டுத்தனமாகச் சொல்லி விடாதீர்கள். அது எதிர்மறை அர்த்தத்தை அளிக்கும் வார்த்தை. கொஞ்சம் ராட்சசத்தனமான, எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் பெண்மணியைத்தான் shrew என்பார்கள். 

Shrewd, shrew ஆகிய வார்த்தைகளைக் குறிப்பிடும்போது விநாயகரின் வாகனமும் நினைவுக்கு வருகிறது. ஏன் என்பதைக் கூற முடியுமா? விடையைப் பிறகு உறுதி செய்து கொள்ளலாம். 

வித்தியாசம் 
 
இளைஞர்கள் பலருக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் உண்டாகி இருக்கக் கூடிய ஒரு சந்தேகம் இது. Bio-data, C.V, Resume ஆகிய மூன்றும் ஒன்றுதானா? அப்படியில்லை என்றால் அவற்றுக்கிடையே என்ன வித்தியாசம்? 

Bio-data என்பது Biographical data என்பதன் சுருக்கம். இதில் தன்னைப் பற்றிய விவரங்களை ஒருவர் பதிவுசெய்து கொள்வார். பெயர், முகவரி, வயது, பிறந்த தேதி, நாடு போன்ற விவரங்களும் இவற்றைத் தொடர்ந்து கல்வி மற்றும் பணி தகுதிகள் ஆகியவை வருட வாரியாகவும் இடம் பெறும். ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்க, ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்க நாம் அளிப்பதெல்லாம் bio-dataதான். என்ன, அச்சிட்ட தாள்களில் தேவைப்படும் விவரங்களைக் கேட்கிறார்கள், நிரப்புகிறோம், அவ்வளவுதான். 

C.V என்பதன் விரிவு Curriculum Vitae. இவை லத்தீன் வார்த்தைகள். “வாழ்க்கைப் போக்கு’’ (Course of life) என்பது இதன் பொருள்.
Resume என்பது ஒரு பிரெஞ்ச் வார்த்தை. இதன் பொருள் summary என்பதாகும். 

பொதுவாக C.V என்பதும் Resume என்பதும் ஒன்றுதான். ஆனால் சிறுசிறு வேறுபாடுகள் உண்டு. 

Resume என்பது அதிகபட்சம் இரண்டு பக்கங்கள் கொண்டதாக இருக்கும். இதிலுள்ள குறிப்புகள் ஏதோ மூன்றாவது மனிதரைப்பற்றி விவரிப்பதுபோல் இருக்கும். (Has secured first rank, Has participated in the cultural events என்பதுபோல). 

C.V என்பது தேவைக்கேற்ப அதிகப் பக்கங்களைக் கொண்டதாக அமையலாம். நான்கு பக்கங்கள்கூட இருக்கலாம். கல்வி, பணி அனுபவங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வரிசையில் விவரிக்கப்படும்.
எப்போது C.V.? எப்போது Resume? 
 
C.V என்பது உங்களைப் பற்றிய பொதுவான கருத்தை உருவாக்கப் பயன்படுகிறது. Resume என்பது குறிப்பிட்ட வேலைக்கு நீங்கள் எவ்வளவு தகுதியானவர் என்பதை உணர்த்தும் முயற்சி. 

வீட்டிலும் சிங்கம் 
 
விநாயகரின் வாகனம் மூஞ்சூறு. மூஞ்சூறுக்கு ஆங்கிலத்தில் என்ன வார்த்தை? Shrew என்பதுதான். (Rat, Mouse ஆகியவை எலியைக் குறிக்கின்றன). 

பெருச்சாளிக்கு ஆங்கிலத்தில் என்ன? கார்ட்டூனில் பார்த்துத் தெரிந்து கொள்ளவும். 

கார்ட்டூனுக்கான ஐடியாவை உருவாக்கியபோது நான் படித்த ஒரு ஜோக் நினைவுக்கு வந்தது. அதைக் கொஞ்சம் மாற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேனே. 

தன் அலுவலகச் சகாக்களிடம் ஒருவர் “நான் valiant, valorous, intrepid, audacious’’ என்றாராம். அதைக் கேட்ட ஒருவர், “சார் நீங்க ஆபீஸிலே சிங்கம்தான், வீட்ல எப்படி?’’ என்றாராம். அதற்கு அவர் “வீட்டிலும் நான் சிங்கம்தான்’’ என்று கூறிவிட்டு ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு “ஆனால் என் மனைவி துர்க்கை. என்மேலே உட்கார்ந்து அதிகாரம் பண்ணுவாங்க’’ என்றாராம். (அவர் தன்னைப் பற்றிப் பெருமையாகக் குறிப்பிட்டுக்கொண்ட நான்கு ஆங்கில வார்த்தைகளும் துணிவைக் குறிக்கின்றன என்பதை இந்நேரம் நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள்).
சிவபெருமானின் வாகனம் எது? உங்கள் விடையை ஆங்கிலத்தில் கூற வேண்டும்.. 
 
பசுவும் எருமையும் 
 
அதற்கு முன்னால் Cow என்றால் என்ன? Buffalo என்றால் என்ன? Ox என்றால் என்ன? Bull என்றால் என்ன? Bullock என்றால் என்ன? சொல்லுங்கள். (இப்போது சிலருக்குச் சின்னதாக ஒரு குழப்பம் வந்திருக்கலாம் கடைசி மூன்றில் எது சிவனின் வாகனம் என்று). 

முதலில் cow என்றால் எது என்பதைத் தெரிந்து கொண்டுவிடுவோம். இதென்ன அசட்டுத்தனம், cow என்றால் பசுமாடுதானே என்பவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். வளர்ச்சி முழுமையடைந்துவிட்ட பல பெரிய பெண் விலங்குகளை cow என்று குறிப்பிடுவதுண்டு. வளர்ச்சியடைந்த பெண் யானை, பெண் திமிங்கிலம் ஆகியவற்றையும்கூட cow என்பதுண்டு. சந்தேகம் எதற்கு என்பதற்காக cow elephant, cow whale என்றும் சிலர் கூறுவார்கள். 

Buffalo என்றால் எருமை. 

எருது என்றால் என்ன? உங்கள் பதில் Ox என்பதா? Bull என்பதா? அல்லது இரண்டு வார்த்தைகளும் சரிதான் என்பதா? (குழப்பம் அடைபவர்கள் கவலைப்பட வேண்டாம். சின்ன வயதில் எருமையை ஆண் என்றும் பசுவைப் பெண் என்றும் அப்பாவித்தனமாக எண்ணியவர்கள் உண்டு. அப்படிக் கூடவா இருப்பார்கள் என்று கேட்காதீர்கள்.
Ox என்றால் மாடு. மாட்டு வண்டியில் பூட்டப்படுவது oxதான். (Ox என்பதன் பன்மை Oxen). ஆஸ்திரேலியாவில் (இந்தியாவிலும் கூடத்தான்) இதை bullock என்பார்கள். Bullock cart என்றால் மாட்டு வண்டி. நிலத்தை உழப் பயன்படும் எருது என்பதும் oxதான். 

பெரும்பாலும் ox எனும் விலங்கின் இனப்பெருக்கச் சக்தியை மருத்துவத்தின் மூலம் நீக்கிவிடுவது வழக்கம். அப்போதுதான் அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியுமாம். 

Bull என்பது காளை. Bison என்றும் கூறுவார்கள். ஸ்பெயினில் புகழ்பெற்ற Bull fighting என்ற விளையாட்டு நினைவுக்கு வருகிறதா? ஜல்லிக்கட்டும்தான். ஆகச் சிவனின் வாகனம் bullதான். 

இன்னமும் விளங்காதவர்கள் ‘ஆ’ என அலறலாம். அல்லது ‘கோ’ என்று கண்ணீர் விடலாம். ஆனால் ஆ, கோ என்ற தமிழ் வார்த்தைகள் பசுவை மட்டும் குறிக்கிறதா? அல்லது பால் தரும் விலங்கு எதையும் குறிக்கிறதா என்று கேட்டுவிடாதீர்கள்.
தொடர்புக்கு:
aruncharanya@gmail.com

பாடங்களை இனிக்கவைக்கும் கற்பனைச் சுற்றுலா! - கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி

வாழ்க்கையில் மனதுக்குப் பிடித்தமான விஷயங்கள் நடந்துவிட்டால், உள்ளம் கொண்டாடும். விருப்பம் இல்லாத விஷயத்தை எதிர்கொள்ள நேர்ந்தால், மனதில் குழப்பங்கள் மூளும். இது அடிப்படை உளவியல். படிப்பை நீங்கள் பிடித்தமான விஷயமாக நினைத்தால் இந்த குழப்பங்கள் இல்லை. இதற்கு ஒரு சுலபமான, எளிமையான தீர்வு உள்ளது.
உங்கள் படிப்பைப் பற்றிய நேர்மறை கற்பனை உலகுக்கு அடிக்கடி ஓர் இன்பச் சுற்றுலா சென்று வாருங்கள். இதற்கு பணம் தேவையில்லை. நண்பர்களும் தேவையில்லை. உளவியலில் இதை ‘மென்டல் டூர்’ (Mental Tour) என்பார்கள். அதாவது, நன்றாக படித்து, நிறைய மதிப்பெண்கள் பெற்று, உங்களுக்குப் பிடித்தமான துறையில் பிடித்தமான வேலையில் இருக்கிறீர்கள். அல்லது சுயதொழிலில் பெரிய அளவில் சாதனை செய்துகொண்டிருக்கிறீர்கள். இப்படிப்பட்ட கற்பனை உலகில் அடிக்கடி உலவுங்கள். பின்பு படித்தால், எந்த பாடமும் பனங்கற்கண்டாக இனிக்கும். இது உளவியல் உண்மை!
தேர்வு காலத்தில் காலடி எடுத்து வைத்துள்ள மாணவர்கள் கண் விழித்துப் படித்துவிட்டு, படுக்கைக்குச் சென்றவுடன் ‘உடனே தூக்கம் வராதா’ என ஏங்குவர். ஏனெனில் அல்ஜீப்ராவும் கெமிஸ்ட்ரி பார்முலாக்களும் மூடிய கண்களுக்குள் அவ்வப்போது வந்து மன இறுக்கத்தை ஏற்படுத்தும். எனவே, சூத்திரம் மனப்பாடம் செய்வதை, படுக்கைக்குச் செல்வதற்கு 2 மணி நேரம் முன்பாக நிறுத்திக்கொள்ளவும்.
நல்ல மதிப்பெண் மூலமாகவே தரமான கல்லூரியில், விரும்பிய மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். இது உண்மைதான். அதே நேரம், மன அழுத்தத்துக்கான முக்கியக் காரணமும் இதுதான். ‘மதிப்பெண் குறைந்தால் டாப்10 கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் போய்விடுமோ’ என்ற அச்சம் இப்போது தேவையில்லாத ஒன்று. டாப் 10 கல்லூரிகள் என்பதில் வணிகம் உட்பட பல்வேறு சூட்சுமங்கள் இருக்கின்றன. அதற்குள் விரிவாக செல்லத் தேவையில்லை. உண்மையில் இங்கு டாப் 100 கல்லூரிகள் உள்ளன. அதில் சேர்ந்து திறமையை நிரூபிப்போம் என்ற மனப்போக்கை வளர்த்துக்கொள்ளுங்கள்.
மன அழுத்தத்துடன் தேர்வு எழுதச் செல்பவர்கள், கவனக்குறைவுக்கு ஆட்பட்டு சிறு பிழைகளை செய்து அதிக மதிப்பெண்களை இழக்கின்றனர். இதை ஒவ்வோர் ஆண்டும் கண்கூடாகப் பார்த்துவருகிறேன். குறிப்பாக சிலருக்கு, கடந்த ஓராண்டாக இல்லாத மன அழுத்தம் திடீரென தேர்வுக்கு ஒரு மாதம் முன்பாக தொற்றிக்கொள்ளும். பதற்றம் அதிகரிக்கும். இதயம் வேகமாக துடிக்கும். உள்ளங்கை, உள்ளங்கால் வியர்க்கும். உடல் சூடாகி லேசான காய்ச்சல் போல உணர்வார்கள். பார்வையும்கூட லேசாக மங்கும். நாக்கு வறளும். படித்தது மொத்தமும் மறந்துபோகும். ஆண்டுக்கு 10 மாணவர்களை இப்படி சந்திக்கிறேன். தவறு மாணவர்கள் மீது அல்ல. அதிகமான அழுத்தத்தை, எதிர்கால பாரத்தை ஓராண்டாக அவர்கள் மேல் சுமத்தியவர்கள் மீதுதான் தவறு.
இதுபோன்ற சூழலில், மாணவர்கள் பயப்படக்கூடாது. பதற்றம் ஏற்பட்டால் எல்லோருக்குமே உடலில் அட்ரீனல், கார்டிசால் ஆகிய ஹார்மோன்கள் சுரப்பது வழக்கம். அவை சுரப்பதால் ஏற்படும் உடலியல் ரீதியான பிரச்சினைகள்தான் உங்களுக்கும் ஏற்படுகின்றன. உங்களுக்குத் தெரிந்த மனநல மருத்துவரிடம் கவுன்சலிங் பெறுவதன் மூலம் ஓரிரு நாட்களில் வெகு சுலபமாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.
எதிர்காலத்தை நன்கு திட்டமிட்டு, லட்சியத்தை அடையும் நோக்கத்துடன் நடந்தால் வீண் குழப்பங்கள், பதற்றம், அச்சம் ஆகிய அனைத்தையுமே தவிர்க்கலாம். அவசரமாக படிப்பது, புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்வது, தெரியாத வினா-விடையையே நினைத்துக்கொண்டு இருப்பது, பாடத்திட்டத்தை விட்டு வெளியே இருந்து கேள்வி வருமா என சந்தேகம் கொள்வது ஆகிய வீண் சந்தேகங்கள், குழப்பங்களை தவிர்க்க வேண்டும். இவையும் மன அழுத்தத்துக்கு முக்கியக் காரணிகள்.
அதேபோல, மாணவர்கள் பெரும்பாலும் ஒரு மதிப்பெண், 3 மதிப்பெண் கேள்விகளில் சிறு தவறு செய்கின்றனர். இவர்கள் என்னிடம் வந்து, ‘நன்றாக தெரிந்த பதில். எப்படி தவறு செய்தேன் என்றே தெரியவில்லை’ என்பார்கள். காரணம், மன அழுத்தம் மட்டுமே. எனவே, தங்கள் பிள்ளையை மன அழுத்தம் வாட்டுகிறதா என்பதைக் கண்டறிவது பெற்றோரின் முக்கியக் கடமை.
மாணவர்கள் பெரும்பாலும் இடத்தை விட்டு நகராமல் ஒரே இடத்தில் அமர்ந்து படிக்கிறார்கள். அதை தவிர்க்கலாம். வீட்டிலேயே மாடியில் சில மணி நேரம் படிக்கலாம். தோட்டம் இருந்தால் அங்கு சிறிது நேரம் படிக்கலாம். பாதுகாப்பான, கவனத்தை சிதறடிக்காத பூங்காக்கள் அருகில் இருந்தால், அவற்றையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இவை எல்லாம் படிப்பு தொடர்பான மன அழுத்தங்களைப் போக்கும் உத்திகள். எங்கு படித்தாலும், அக்கம்பக்கத்தில் வேடிக்கை பார்க்காமல் உங்கள் கவனம் படிப்பில் மட்டுமே இருக்கவேண்டும்.
ஒரே பணியில் வெகு நேரம் கவனம் செலுத்துவது கடினம் என்பதால் மனதை மாற்றுச் சூழலுக்கு கொண்டு செல்வது மனதை சமநிலைப்படுத்தும். மனச் சமநிலையுடன் படிக்கும் போது தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்த்துக்கள்!
இவை எல்லாம் முக்கியம்..
# வினா வங்கி மற்றும் பாடப் புத்தகத்தில் இருந்தே 80 சதவீத கேள்விகள் கேட்கப்படுவதால், அதை நன்றாக படித்து வைத்துக்கொள்ளுங்கள்.
# நன்றாக படித்த பாடங்களை ஒருமுறைக்கு 2 முறை எழுதிப் பாருங்கள். 20 நிமிடம் படித்தால், 10 நிமிடம் அதை எழுதவேண்டும்.
# மாதிரி தேர்வில் செய்த தவறுகளை பட்டியலிட்டு, அதில் செய்யவேண்டிய திருத்தங்களுக்கு முக்கியத்துவம் அளியுங்கள். மாதிரி தேர்வில் சாய்ஸில் விட்ட கேள்விகளை அக்கறை எடுத்துப் படித்து, எழுதிப் பாருங்கள்.
# வகுப்பில் எழாத பாட சந்தேகங்கள், படிக்கும்போது எழலாம். உடனே ஆசிரியரை அணுகி தீர்வு காணுங்கள்.
# எல்லாவற்றையும்விட முக்கியம்.. படிப்பையும் தேர்வையும் தாண்டி மிகப் பெரிய உலகம் ஒன்று இருக்கிறது. அதை மனதில் நிலைநிறுத்துங்கள். வெற்றி உங்களுக்கே!

இவ்வளவு பிழைகளா, நம் பள்ளிப் பாடநூல்களில்? - மு. சிவகுருநாதன்

தமிழ்ச் சூழலில் பள்ளிப் பாடநூல்களை ஆய்வு செய்வது ஒரு சுவாரசியமான வேலை. நம் கல்வி முறையின் தரம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கு இது மிகவும் அவசியமானது. 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான சமூக அறிவியல் பாடநூல்களை இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.
தவறான தகவல்கள்
ஒரு பாடத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் 27 என்று பட்டியலிடப்பட்டிருக்கிறது. ஆனால், உறுப்பு நாடுகள் மொத்தம் 28. இந்தப் பட்டியலில் குறிப்பிடப்படும் லைபீரியா ஓர் ஆப்பிரிக்க நாடு. அதற்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் என்ன சம்பந்தம்? லாத்வியா, குரேஷியா ஆகிய இரு நாடுகளும் பட்டியலில் விடுபட்டிருக்கிறது.
ஐ.நா. சபையின் சிறப்பு நிறுவனங்களின் பட்டியலில் ‘உலக வங்கி’ (ஐ.பி.ஆர்.டி.) என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. விளக்கப் படத்திலோ, ‘பன்னாட்டுக் கிராமப்புற வளர்ச்சி வங்கி’ என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘புனரமைப்புக்கும் மேம்பாட்டுக்கு மான பன்னாட்டு வங்கி’யில் (இன்டர்நேஷனல் பேங்க் ஃபார் ரீகன்ஸ்ட்ரக்‌ஷன் அண்டு டெவலப்மென்ட்) கிராமம் நுழைந்தது எப்படி?
சமணத்தின் சின்னமாக ஒரு பாடத்தில் தர்மச் சக்கரத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இது சமணத்தின் சின்னமல்ல. ஸ்வஸ்திகா, மூன்று புள்ளிகள், பிறை வடிவத்தின் மீது ஓர் புள்ளி போன்றவற்றை உள்ளடக்கிய சின்னமே சமணச் சின்னமாக அறியப்படுகிறது.
வடுவூர் பறவைகள் புகலிடம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திருவாரூர் மாவட் டத்தில்தான் வடுவூர் இருக்கிறது. அதேபோல், நரிமணம் (பனங்குடி) எண்ணெய் சுத்திகரிப்பாலை இருப்பது நாகப்பட்டினம் மாவட்டத்தில்தான்.
பாலைநில மக்கள் கள்ளர் என்பது தமிழ்ப் பதிப்பில் கள்வர் என்று திருத்தப்பட்டுள்ளது. ஆங்கிலப் பதிப்பில் ‘கள்ளர் ஆஃப் பாலை’(Kallar of Paalai) என்றுதான் நீடிக்கிறது.
தலைவர்களைக் கொச்சைப்படுத்துதல்
தாழ்த்தப்பட்டோருக்கான அம்பேத்கரின் விடுதலை இயக்கமான ‘பஹிஷ்கிரித் ஹிதகரிணி சபா' (Bahishkrit Hitaharini Sabha) என்பது ‘பாசிகிருகித் காரணி சபா' என்று முதல் பதிப்பில் கொடுக்கப்பட்டிருந்தது. அடுத்த பதிப்பில் (2012) இன்னும் மோசம், பகிஷ்கிருத்திகாராணிசபா என்று மாற்றப்பட்டிருக்கிறது.
டிசம்பர் 25,1927 ‘குடியரசு’ இதழிலிருந்து பெரியாரின் சாதிப் பட்டம் நீக்கப்படுகிறது. 1929 செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க மாநாட்டில் வெளிப்படையாக அதனை ஓர் இயக்கமாக முன்னெடுத்த பெரியாரின் பெயர் பாடப் புத்தகத்தில் ‘ஈ.வே. ராமசாமி நாயக்கர்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், தனது வாழ்நாள் இறுதிவரை சாதிப் பெயரைச் சுமந்த எஸ்.சத்தியமூர்த்தி அய்யர், வாஞ்சி அய்யர் போன்றவர்கள் எஸ்.சத்தியமூர்த்தி, வாஞ்சிநாதன் ஆக மாறிவிடுகிறார்கள்.
மொழியாக்கக் குளறுபடிகள்
ஃபேக்ஸ் (Fax), இன்புட் (Input), ஃபாஸ்ட் பிரீடர் ரியாக்டர் (Fast Breeder Reactor), மொபைல் டவர்ஸ் (Mobile towers), டிரான்ஸ்ஜென்டர் (Transgender), ரிமோட் சென்ஸிங் (Remote sensing), மகத் மார்ச் (Mahad march) போன்ற சொற்கள் ‘பிரதிகள், இடுபொருள், ஊதுஉலைகள், மின்னஞ்சல் கோபுரம், திருநங்கைகள், தொலைநுண்ணுணர்வு, மகத் மார்ச் பேரணி’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், சரியான மொழிபெயர்ப்பு முறையே ‘தொலைநகல், உள்ளீடு, அதிவேக ஈனுலைகள், கைபேசிக் கோபுரங்கள், மாற்றுப்பாலினம், தொலை உணர்வு, மகத் பேரணி’ என்பதாகும்.
ஹிட்லர் ‘பெயின்ட’ராக வியன்னாவில் சில காலம் பணியாற்றி னாராம். பெயின்டர் (painter) என்று சொன்னால் நம்மூர் வழக்கில் வண்ணமடிப்பவர் என்றுதானே புரிந்துகொள்வார்கள். ஓவியராகப் பணியாற்றினார் என்றல்லவா இருந்திருக்க வேண்டும்.
எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் (electric-electronic) வித்தியாச மின்றி மொழிபெயர்த்துவிடுகிறார்கள். முன்னது ‘மின்னியல்’; பின்னது ‘மின்னணுவியல்’. மார்க்சியம் என்பது தமிழ்ச் சொல்லாகவே ஆகிவிட்ட நிலையில், மார்க்ஸிஸம் என்று எழுதுவதுதான் நடக்கிறது.
கருத்தியல் தெளிவின்மை
ஹிட்லர், முசோலினி ஆகியோரின் வெளிநாட்டுக் கொள்கைகள் முற்போக்கானவை என்றும் தேவதாசிகளைப் பற்றிச் சொல்லும்போது, ஆலய சேவகிகள் என்றும் விளக்கம் அளிக்கப்படுகிறது. இவர்கள் இறைப் பணி மற்றும் கலைப் பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டார்கள் என்றும், காலமாற்றத்தால் பிரபுக்கள், ஜமீன்தார்கள் ஆகியோரால் இம்முறை சீரழிக்கப்பட்ட தாகவும் சொல்லப்படுகிறது. பாசிசம், நாசிசம், தேவதாசி முறை ஆகியவற்றை உயர்த்திப் பிடிக்க வேண்டிய அவசியமென்ன?
புள்ளிவிவரங்களில் நம்பகமின்மை
மரபுசாரா மின்சக்தி உற்பத்தியில் மிகுந்த இடர்ப்பாடுகள் இருப்பதாகப் பட்டியல் கொடுக்கப்படுகிறது. ஒலி மாசு, அதிகப் பண முதலீடு தேவைப்படும் நிலை, வானொலி-தொலைக்காட்சி அலைகளுக்கு இடையூறு, வனவிலங்குகள் வாழிட அழிப்பு என்று இடையூறுகள் பட்டிலியடப்படுகின்றன. ஆனால், அணு மின்சக்தி, அனல் மின்சக்தியின் இடர்ப்பாடுகள் மருந்துக்குக்கூடச் சொல்லப்படவேயில்லை.
இந்திய அளவில் அனல் மின்சக்தி உற்பத்தி 70%, நீர் மின்சக்தி 25% என்றும் அணு மின்சக்தி 272 மெ.வா. என்றும் சொல்லப்படுகிறது. எல்லாவற்றையும் சதவிகிதத்தில் கூற வேண்டுமல்லவா? 31.07.2014 நிலவரப்படி, இந்தியாவின் ஒட்டுமொத்த மின்உற்பத்தி 2,50,257 மெ.வா.; இதில் நிலக்கரி, எரிவாயு, டீசல் போன்றவற்றால் கிடைக்கும் அனல் மின்உற்பத்தி 1,72,986 மெ.வா. (69.1%), நீர் மின்சக்தி 40,799 மெ.வா. (16.3%), அணு மின்சக்தி 4780 மெ.வா. (1.9%) புதுப்பிக்கத் தக்க எரிசக்தி 31,692 மெ.வா. (12.7%) என்பதுதான் அரசின் புள்ளிவிவரம்.
வரலாற்றுத் திரிபுகளும் மறைப்புகளும்
1940-ல் முகமது அலி ஜின்னா தனிநாடு கோரிக்கையை முன்வைத்தார் என்றும் 1946-ல் நேருவின் இடைக்கால அரசில் பங்கேற்க மறுத்து, தனது தனிநாடு கோரிக்கையில் பிடிவாதமாக நின்றதாக பிரிவினைக்கான பழி ஜின்னா மீது சுமத்தப்பட்டு இளம் உள்ளங்களிடையே காழ்ப்புணர்ச்சி உருவாக்கப்படுகிறது. இந்திய தேசிய காங்கிரஸும் இந்துத்துவமும் இணைந்து வளர்ந்த வரலாற்றை மறைத்துவிட்டு, ஜின்னா மீது பிரிவினை முத்திரை குத்துவது நியாயமாகுமா?
ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை போன்ற இந்துத்துவ அமைப்புகளைத் தொடங்கிய அனைவரும் காங்கிரஸ்காரர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இரு அமைப்புகளில் அங்கம் வகிக்கக் கூடாதென 1936-ல் காங்கிரஸ் கட்சியில் தீர்மானம் கொண்டுவரும்வரை இந்நிலையே நீடித்தது. இந்தக் கலாச்சாரத் தேசியவாதிகளின் வல்லாதிக்க வெறியை ‘இந்தியா வல்லரசாகும்’ என்று சொல்லி, பிஞ்சு உள்ளங்களில் நஞ்சு விதைப்பது நியாயமாகுமா?
கலெக்டர் ஆஷ் 4 பேரைச் சுட்டுக் கொன்றதாகவும் அதற்குப் பழிதீர்க்கவே அவரது கொலை நடைபெற்றதாகவும் சொல்லப்படுகிறது. 1908 மார்ச் 18-ல் வ.உ.சி. கைது செய்யப் பட்டவுடன் தூத்துக்குடியில் கடையடைப்பும் போராட்டங் களும் நடைபெற்றபோது, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டனர். மேலும், வாஞ்சிநாதனின் சட்டைப் பையிலிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில் துப்பாக்கிச் சூடு குறித்து எதுவும் இல்லை. மாறாக, ‘கேவலம் கோ மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை… கொல்லும் செயலுக்கு” முன்னோட்டம் என்கிறரீதியில்தான் அந்தக் கடிதத்தில் இருந்தது.
பெரியார், அண்ணா, திராவிட இயக்கம்
1947 ஆகஸ்ட்15-ஐ பெரியார் துக்க நாளாக அறிவித்தபோது, அண்ணா அதை மறுத்து இன்ப நாள் என்றது, தேர்தலில் பங்கேற்க அண்ணா விரும்பியது, கடவுள் மறுப்புக் கொள்கையில் அண்ணாவுக்கு இருந்த தயக்கம் போன்ற வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டு, தி.மு.க. உருவாக்கத்துக்கு பெரியார்-மணியம்மை திருமணம் காரணமாக்கப்படுகிறது.
சேலம் மாநாட்டுக்கு முன்னதாகவே ஆகஸ்ட் 05, 1944 ‘கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என்று திருத்தி அமைத்தல்’ என்று ‘குடியரசு’ இதழில் துணைத் தலையங்கம் பெரியாரால் எழுதப்பட்டுள்ளது. மேலும், சேலம் செவ்வாய்ப்பேட்டையில் நடந்த நீதிக் கட்சி மாநாடு தொடர்பான ‘குடியரசு’ இதழ் தலையங்கங்களில் (ஆகஸ்ட்12,19 -1944) திராவிடர் கழகம், திராவிட நாடு குறித்தும் பெரியார் எழுதியுள்ளபோது, அண்ணா பெயரை மாற்றியதாகச் சொல்வது எந்த அளவுக்கு உண்மை?
இவ்வளவு பிழைகள் மலிந்த பள்ளிப் பாடநூல்களைத் தமிழ் அறிவுலகம் கண்டுகொள்ளாமல் இருப்பது சரியல்ல. இது பொருட்படுத்தத் தக்கதல்ல என்று கருதினால், அது மாபெரும் தவறு. வருங்காலச் சந்ததியை வழி நடத்தும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம்.
- மு. சிவகுருநாதன், ஆசிரியர், சமூக-அரசியல் விமர்சகர், தொடர்புக்கு: musivagurunathan@gmail.com

கரூர் மாணவர் மட்டும்தான் குற்றவாளியா? - tamil.thehindu

வெட்கக்கேடு என்று சொல்லிவிட்டு, ஒதுங்கிக்கொள்ள முடியாது யாராலும். நம் சமூகத்தின் கூட்டுக் குற்றம் என்றுதான் சொல்ல வேண்டும். அரசில் தொடங்கி கடைசிக் குடிமக்கள் வரை பொறுப்பேற்கத்தான் வேண்டும்.
கரூர் பஸ் நிலையத்தில் ஊரே பார்த்திருக்க பள்ளி மாணவர் மது போதையில் மயங்கிக் கிடந்ததையும் ஊடகங்கள்/ சமூக வலைதளங்களில் அவருடைய படம் முழு விவரங்களோடு வெளியாகிச் சந்திசிரிப்பதையும் என்னவென்று சொல்வது? மோசத்திலும் மோசம், அந்த மாணவர் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது. தமிழகத்தில் என்னதான் நடக்கிறது?
‘ஒழுங்கு நடவடிக்கை’யாம். கரூர் மாவட்டக் கல்வி நிர்வாகத்தின் விளக்கம் சொல்கிறது. ஒழுங்காகப் பள்ளிக்கு வராதது, பள்ளிச் சீருடையில் சென்று மது அருந்தி போதையில், பஸ் நிலையத்தில் மயங்கிக் கிடந்தது ஆகிய ‘ஒழுங்கீனச் செயல்’களுக்காக அவரை நீக்கியதாக மாவட்டக் கல்வி அலுவலர் சார்பில் விளக்கம் அளிக்கப் பட்டிருக்கிறது.
ஆட்டோ ஓட்டுநரின் மகனான அந்த 17 வயதுச் சிறுவனின் கல்வி வாழ்க்கை கிட்டத்தட்ட முடக்கப்பட்டிருக்கிறது. மாணவர்கள் ஒழுக்கம் தவறி நடந்தால் அவர்களைத் திருத்துவதற்கு எத்தனையோ வழிகள் இருக்க, அந்த மாணவரின் எதிர்காலத்தையே அழித்துவிடும் அளவுக்கு இப்படியொரு தண்டனையை மாவட்டக் கல்வி நிர்வாகம் எப்படி வழங்கலாம்? மாணவர்களை நல்வழிப்படுத்தத்தான் கல்விக்கூடங்களே தவிர, கைவிடுவதற்காக அல்ல. நம்முடைய அமைப்புகள் ஒவ்வொன்றும் எந்த அளவுக்குப் பொறுப்பற்றவையாக மாறிக்கொண்டிருக்கின்றன என்பதற்கான உதாரணம் இது.
ஒரு மாணவருக்குத் தன்னுடைய எதிர்காலத்தின் மீது எந்த அக்கறையும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நம் சமூகத்துக்கு அந்த மாணவர் மீது அக்கறை இருக்க வேண்டுமல்லவா? அந்த மாணவரைப் படம் எடுத்தவர்களும், அந்தப் படத்தைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்டவர்களும், ஊடகங்களும் ‘நல்லது செய்கிறோம்’ என்ற போர்வையில், அந்த மாணவரின் எதிர்காலத்தை எவ்வளவு நாசமாக்கியிருக்கிறார்களோ, அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாத பங்கத்தை உருவாக்கியிருக்கிறது கரூர் மாவட்டக் கல்வி அலுவலரின் நடவடிக்கை. ஒரு சமூகம், இந்த அளவுக்கா பொறுப்புணர்வு இல்லாமல் இருக்க முடியும்?
நம்மைத் தலைகுனியச் செய்யும் பல கேள்விகளை இந்தச் சம்பவம் எழுப்புகிறது. கரூர் பஸ் நிலையத்துக்கு அருகில் இருக்கும் ‘டாஸ்மாக்’ கடையில்தான், தன் நண்பர்கள் சிலருடன் அந்த மாணவர் மது அருந்தியிருக்கிறார். மாணவர் மது அருந்தியது பெரும் தவறுதான். அதேசமயம், அரசாங்கம் மது விற்பது சரியா? அதுவும் பள்ளிச் சீருடையில் இருந்த மாணவர்களுக்கு மதுவை விற்பது சரியா? அப்படி மது விற்றவர்கள்/ விற்பவர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? கரூரில் மட்டும்தான், அந்த ஒரு கடையில் மட்டும்தான், அந்த ஒரு மாணவர் விவகாரத்தில் மட்டும்தான் தவறு நடந்திருக்கிறதா? இப்படி ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் ஒவ்வொரு கடையிலும் மாணவர்களுக்கும் சிறார்களுக்கும் குடிக்க மது கொடுத்துச் சீரழிக்கும் ‘டாஸ்மாக்’ நிறுவனத்துக்கு என்ன தண்டனை? வருமானம் என்ற பெயரில் ஒட்டுமொத்த சமூகத்தையும் மதுவெனும் பாதாளத்தில் தள்ளி மூழ்கடிக்கும் நிர்வாகப் போதைக்கு என்ன தண்டனை? இந்தக் கொடுமைகளையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டே கடக்கும் நம்முடைய பொறுப்பற்றத்தனத்துக்கு என்ன தண்டனை?

சாதிகளற்ற சமத்துவம் தேவை - இராம. பரணீதரன்

இந்தியா போன்ற பல்வேறு மொழி, கலாசாரம், பண்பாடு உடைய மதச்சார்பற்ற நாட்டில் அவ்வப்போது சிறுசிறு பிரச்னைகளும், கலவரங்களும் ஏற்படுவது வழக்கம்தான்.
இதுபோன்ற பிரச்னைகள் நம்நாடு சுதந்திரமடைவதற்கு முன்பே தொடங்கிவிட்டன. இவற்றிற்கு முக்கியக் காரணம் ஒற்றுமையின்மையே.
காலங்கள் மாறினாலும், நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்றாலும், இந்த ஒற்றுமையின்மை மட்டும் இன்றுவரை அப்படியே தொடர்கிறது. மாநிலங்கள், மாவட்டங்கள், கிராமங்கள் என்று எங்கும் ஒற்றுமை இருப்பதில்லை.
குறிப்பாக, மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் ஒற்றுமை உணர்வு மிகவும் குறைவு. அதனால்தான் சாதிக் கலவரங்களும், மதக் கலவரங்களும், பழிக்குப்பழியாகக் கொலைகளும் நடைபெற்று தமிழகத்தில் அவ்வப்போது ரத்த ஆறு ஓடுகிறது.
ஜாதி, மத மோதல்களைத் தடுக்க அரசு எவ்வளவோ முயற்சிகள் எடுத்தாலும், அரசால் முழுமையாகத் தடுக்க இயலவில்லை.
ஏனெனில், இங்குள்ள மக்களின் மனதில் சாதியக் கோட்பாடுகள்  ஆழமாக வேரூன்றிவிட்டன. அவற்றை அகற்றுவது எளிதானதல்ல.
10 வருடங்களுக்கு முன்பு எனது மாணவன் ஒருவன், தேர்வுத் தாளில் தன் பெயரோடு தன் ஜாதியின் பெயரையும் இணைத்து எழுதியிருந்தான்.
இதுகுறித்து, நான் அவனை அழைத்துக் கேட்டபோது, தன் பெயரே அதுதான் என வாதிட்டான். நான் "வருகைப் பதிவேட்டில் பெயர் எவ்வாறு உள்ளதோ அப்படித்தான் பெயரை எழுதவேண்டும்' என அறிவுறுத்தினேன்.
அதற்கு அந்த மாணவன் கூறிய பதில் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. "சார், எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்தே எங்க ஊர் திருவிழா, திருமண விழா என எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் போஸ்டர், பேனரில் என் பெயரை இப்படித்தான் போடுவோம்' என்றான்.
குழந்தைகளின் பிஞ்சு நெஞ்சிலேயே ஜாதி எனும் விஷ விதை தூவப்படுகிறது. இது, குழந்தையோடு சேர்ந்து வளர்ந்து, வாலிப பருவத்தில் தன் வீரியத்தை ஜாதி மோதலாகவோ, கலவரமாகவோ காட்டிவிடுகிறது. இது இன்று நேற்றல்ல, காலங்காலமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் ஒரு காதல் விவகாரம் இரு கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சமூகத்தினரிடையே மிகப் பெரிய பிரச்னையாக மாறி பல உயிர்களைப் பலி வாங்கியதோடு, பெரும் பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியதை யாரும் மறந்திருக்க முடியாது.
பிரச்னையின் இத்தகைய தீவிரப் போக்குக்கு ஒரு சில தலைவர்களும் காரணம் என்பதை யாரும் மறுக்க இயலாது.
மக்களிடையே ஜாதித் தீயை மூட்டிவிட்டு, அதில் குளிர் காய்பவர்களே இன்று அதிகமாக உள்ளனர். நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டவர்களை, தங்கள் ஜாதிக்காரர், தங்கள் இனத்தைச் சேர்ந்தவர் என முத்திரை குத்தி, அந்தத் தலைவர்களின் தியாகத்தையும் கொச்சைப்படுத்துவதன் மூலம், தேசியத் தலைவர்களை ஜாதியத் தலைவர்களாக மாற்றிவிடுகின்றனர்.
இதேபோல், ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட தேசியத் தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாள் வரும்போது, சில ஊர்களில் பதற்றம் நிலவுகிறது.
எப்போதும், எதுவும் நடந்துவிடலாம் என்ற சூழல். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்குச் சட்டம் போட்டு அந்த நிகழ்ச்சியை நடத்தவேண்டிய சூழலில் நாடு இருக்கிறது.
தென்மாவட்டங்களில் நடைபெறும் ஜாதி, இன மோதல்களைத் தடுப்பது தொடர்பாக காவல் துறையினரின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
ஆலோசனைக் குழு, சுவரில் எழுதியுள்ள ஜாதி விளம்பரங்களை தார் பூசி அழிப்பது, குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த காவல் துறை உயர் அதிகாரிகளை அப்பகுதியில் நியமிக்காமல் இருப்பது போன்ற ஆலோசனைகளை அரசுக்குத் தெரியப்படுத்தியுள்ளன.
ஆனால் இவையெல்லாம் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாகாது. இத்தகைய விஷ விருட்சங்களை வேருடன் களைய வேண்டுமே தவிர, கிளைகளை முறிப்பதால் மட்டும் பயன் கிடைத்துவிடாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்று அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தோரும் நன்கு படித்து, மிக உயர்ந்த பதவிகளிலும், நல்ல பொருளாதார நிலையிலும் உள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் ஜாதியின் தேவை என்ன  என்பதைச் சிந்திக்கும் நேரம் வந்துவிட்டது.
இத்தகைய ஜாதிய பிரச்னைகளுக்கான தீர்வு நம் கைகளில்தான் உள்ளது. திறமையின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு கல்வி ஒதுக்கீடு, பணி நியமனம் வழங்க வகை செய்யவேண்டும்.
   நன்கு படித்து, மதிப்பெண்கள் பெற்று மருத்துவர் ஆனவர்தான் மக்களுக்குச் சிறப்பான மருத்துவச் சேவை அளிக்க முடியும். நன்கு படித்து, பொறியாளர் ஆனவர் கட்டும் பாலம்தான் சிறப்பான முறையில் மக்களுக்கு பயனளிக்கும்.
திறமைக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் கல்வி, வேலைவாய்ப்பு முறை அமலுக்கு வரவேண்டும்.
 காதல் திருமணங்கள் பெருகி, ஜாதி வேறுபாடற்ற சமுதாயம் மலரவேண்டும். அப்படியொரு சமத்துவம் கண்டால்தான் நாடு முன்னேறும்.

பிரச்னை நகையல்ல! - தினமணி தலையங்கம்

மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரும்போது விலை உயர்ந்த நகைகளை அணிந்துவரக் கூடாது, செல்லிடப்பேசி கொண்டு வரக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.

ஒரு மாணவி தன் வகுப்புத் தோழியின் காதணிக்கு ஆசைப்பட்டு, அவரைக் கிணற்றில் தள்ளிக் கொன்ற சம்பவத்தையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அந்த நேரத்துக்கான அதிரடி நடவடிக்கையாக இருக்கலாமே தவிர, இன்றைய பள்ளிச் சூழலுக்கும் வளர் இளம் பருவம் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கும் தீர்வாக இருக்க முடியாது
.
உறவினரை, மனைவியை, நண்பனை ஆத்திரத்தால், பொறாமையால் இறந்து போகும் நிலைக்கு காயப்படுத்தும் சம்பவங்களில் பெரும்பாலானோர் செய்யக்கூடியது, நகைகளை, உடைமைகளை எடுத்து மறைத்து, அந்தக் கொலையை யாரோ நகைக்காக செய்ததுபோல திசைதிருப்புவதுதான். வெறும் காதணிக்காக சக மாணவியைக் கொன்றிருக்கிறார் என்பது, முதல் தகவல் மட்டுமே. உண்மையில் அவர்களுக்குள் எத்தகைய நட்பு இருந்தது, அந்த நட்பு எவ்வாறு பகைமையானது, எதனால் மரணம் நேர்ந்தது என்று பல கோணங்களில் விசாரிக்க வேண்டிய வழக்கை, வெறும் காதணிக்காக கொலை என்று முடிவு செய்துவிட முடியாது.

இன்று மாணவர்கள் கொண்டு செல்லும் ஆன்ட்ராய்ட் செல்லிடப்பேசி விலை மிக அதிகம். ஏறக்குறைய எல்லா மாணவர்களும் வைத்திருக்கிறார்கள். இன்று ஒரு 100 சிசி திறன் கொண்ட இரு சக்கர வாகனத்தின் விலை சுமார் ரூ.60,000. பல மாணவர்கள், குறிப்பாக, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் இரு சக்கர வாகனத்தில்தான் வலம் வருகின்றனர். இன்றைய வளர் இளம் பருவத்தினர் அனைவரும் ஏ.டி.எம். அட்டை வைத்திருக்கின்றனர். பல மாவட்டங்களில் கல்வி உதவித் தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதால், அவர்கள் வங்கிக் கணக்கில் பணம் இருக்கவே செய்கிறது. வெறும் நகை, பணம், வாகனம், செல்லிடப்பேசி இவற்றுக்காக மட்டுமே சக மாணவனையோ, மாணவியையோ கொலை செய்ய முடியும் என்றால், தமிழ்நாட்டில் பெரும்பாலான பள்ளிகள் கொலைக்களமாகத்தான் இருக்க வேண்டும். உண்மை நிலை அதுவல்ல.

இன்றைய வளர் இளம் பருவ மாணவர்களிடம் உள்ள சிக்கல், அவர்களது இனம் புரியா உணர்ச்சிக் கொந்தளிப்புதான். இந்த உணர்ச்சிக் கொந்தளிப்பு ஒருதலைக் காதலாக, தன் அந்தரங்கத்தில் அடுத்தவர் தலையீட்டின் காரணமாக, கேலியின் விளைவாக, பதிலுக்குப் பதில் கொடுக்கும் ஆக்ரோஷமாக இருப்பதுதான் பெரும்பாலும் இளம் சிறார்கள் குற்றத்தில் ஈடுபடக் காரணமாக அமைகிறது. இந்தச் சிக்கலை உருவாக்கக்கூடிய, வன்மம் விளையும் இடமாக பள்ளி வளாகம் இருப்பதால், இந்த உணர்வுக் கொந்தளிப்பை நெறிப்படுத்தி, அமைதிகொள்ள செய்யும் இடமாகவும் பள்ளி வளாகம்தான் இருக்க முடியும்.

வளர் இளம் பருவத்தினரின் வன்மத்துக்கு அடிப்படைக் காரணம் தாங்கள் காட்டிக் கொடுக்கப்படுவதும், தங்கள் அந்தரங்கத்தில் பிறர் தலையிடுவது அல்லது அதைத் தெரிந்துகொண்டு தங்களை மிரட்டுவதும்தான். கல்லூரி வளாகங்களில் நடக்கும் கொலைகளுக்கான அடிப்படைக் காரணமே இவைதான். இதே காரணங்கள் இப்போது உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி வளாகங்களிலும் பரவத் தொடங்கிவிட்டன. இந்த வகையில், உயர்நிலைப் பள்ளிகள் இளநிலைக் கல்லூரிகளாக மாறியிருக்கின்றன. இதுதான் உண்மையான சிக்கல்.

பள்ளிக்கு வராமல் தான் வெளியே சுற்றியதை வீட்டிற்குத் தெரியப்படுத்திவிட்டான் அல்லது வேறு மாணவர்களிடம் சொல்லிவிட்டான் என்பதிலும், தனது செல்லிடப்பேசியின் சேமிப்பு அறைகளைத் திறந்துப் பார்த்து அந்தரங்கங்களை அறிந்துகொண்டு விட்டான் என்பதிலும்தான் இன்று இளைஞர்களிடையே முதல் வன்மம் தொடங்குகிறது. நட்பின் எல்லை எது? ஒருவருடைய அந்தரங்கம் என்பது என்ன? எதைக் கேலி செய்யலாம்? எதைத் தவிர்க்க வேண்டும் என்பதைப் போன்ற பொது வெளி பழகு முறைதான் இன்று பள்ளியில் சொல்லித் தரப்பட வேண்டிய பாடம். இதை எப்படிச் செய்வது என்பது குறித்துதான் நமது கல்வித் துறை சிந்திக்க வேண்டும்.

இன்றைய மாணவர்களுக்கு பாலியல் கல்வி தேவையே இல்லை. அவர்களுக்கு எல்லாமும் தெரிந்திருக்கிறது. அவர்களிடம் காதல் என்பது வெறும் உடல் கவர்ச்சி என்று பேசுவது பயனளிக்காது. அவர்களிடம் சொல்ல வேண்டியது "கைக்கிளை' குறித்தும், "பொருந்தாக் காமம்' குறித்தும்தான். ஒருவரையொருவர் நேசிப்பதுதான் காதல் என்றாலும், உன்னை நேசிக்கும்படி இன்னொருவரைக் கட்டாயப்படுத்த முடியாது என்பதை மாணவர்களுக்குப் புரிய வைப்பதுதான் இன்றைய தேவை. அதிகாரத்தாலும் பணத்தாலும் மிரட்டலாலும் காதலைப் பெற முடியாது என்பதை உணர்த்துவதுதான் இன்றைய பாலியல் கல்வியாக இருக்க முடியும்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் இருபது பேருக்கு ஓர் ஆசிரியரை, அவர் வகுப்பறைக்கு வெளியே தோழனாக இருக்கும் நிலையை உருவாக்குவதும், மாணவர்களின் திசைமாறும் போக்குகளை சுட்டிக் காட்டவும், பிணக்குகளில் விலகி நின்று சிக்கலை அவிழ்க்க உதவும் நண்பனாய் இருப்பவரே இன்றைய நல்லாசிரியர். அவர் நண்பனாய், மந்திரியாய் நல்லாசிரியனுமாய் மாறுவது நிச்சயமாக மாணவர்களுக்குத் தேர்வு மதிப்பெண் கிடைக்க உதவாதுதான். ஆனால், அவர்கள் மனிதனாய் மாற அது உதவும்.

ஆசிரியர்கள் பாடப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, மாணவர்களிடம் பழக வேண்டும் என்பதுதான் இன்றைய கல்வித் துறையின் உத்தரவாக இருக்க வேண்டும்.

Thursday 8 January 2015

அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு காலை 8 மணிமுதல் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.





தினத்தந்தியின் ‘ஆங்கிலம் மிக அவசியம்’ - பகுதி - 17


தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான பொங்கல் போனஸ் - அரசாணை வெளியீடு

CLICK HERE TO DOWNLOAD தமிழ் அரசாணை 9 நிதித்துறை நாள் : 08/01/2015 

சி& டி-பிரிவு ஊழியர்களுக்கு-ரூ-3000/-

& பி -பிரிவு ஊழியர்களுக்கு-ரூ-1000/-

ஓய்வூதிய தாரர்களுக்கு-ரூ-500/-

 

Wednesday 31 December 2014

திருஉத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம் ஜனவரி 5-ந்தேதி நடைபெறுகிறது - தினத்தந்தி



ராமநாதபுரம், டிச.29-
வைகை என்னும் பொய்யா குலக்கொடி - வேகவதி - புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி இவ்வாறு அன்று வாழ்ந்த தமிழ் புலவர்களால் புகழ்ந்து பாடப்பட்டது வைகை ஆற்றின் முகத்துவாரமான ராமநாதபுரம். இங்கு மகுடமாக அமைந்திருப்பது திருஉத்தரகோச மங்கை திருத்தலம்.

ஆதி சிதம்பரம்

இலக்கிய சிறப்பும், இதிகாச பெருமையும் கொண்டு விளங்கும் இந்த திருஉத்தரகோசமங்கை தொல்காப்பிய காலத்துக்கு முந்தைய தொன் மை வாய்ந்தது. இந்து மதவேதங்களிலும் புராணங் களிலும் உலகில் சிவபெருமான் உறையும் முதல் திருத்தலம் இதுதான் என்று வர்ணிக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்தகோவில் ஆதிசிதம்பரம், பூலோக கைலாயம், சிற்றம்பலம், பொன்னம்பலம் என்றெல்லாம் புகழ்ந்து போற்றப்படுகிறது.

இந்த புண்ணிய தலமான திருஉத்தரகோசமங்கை ராமநாதபுரத்தில் இருந்து தென்மேற்கே 10 மைல் தொலைவில் உள்ளது. உயர்ந்து நிற்கும் கோபுரம், மாட வீதிகள், மணிமண்டபங்கள், எழிற்கூடங்கள், நீண்ட நெடிய தாழ்வாரங்களுடன் கண்ணைக் கவரும் வகையில் காட்சி தருகிறது. மண்எட்டும் புகழ் பரப்பும், விண் எட்டும் கோபுர விமானம், கர்ப்ப கிரகம் அன்றைய தமிழர்களின் நுண்ணிய கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

பிரபஞ்சத்தின் முதல் பூபாகம்

தமிழ் வளர்த்த சமய குரவர்கள் நால்வர் களில் ஒருவரான மாணிக்க வாசகர் அவரின் தெய்வீக பாடல்களில் மண் முந்தியோ மங்கை (திரு உத்தரகோசமங்கை) முந்தியோஎன்று பழம் பாடல்களில் குறிப்பிட்டு கூறுவதில் இருந்து இந்த ஊர் பிரபஞ்சத்தின் முதல் பூபாகம் என்று உறுதிபட நம்புகிறார்கள். திருஉத்தரகோசமங்கை திருத் தலத்தின் புராண வரலாறு ஒவ்வொருவரையும் புல்லரிக்க வைக்கிறது. காலங்களை வேத காலம், இதிகாச காலம், சங்க காலம், சரித்திர காலம் என்று பிரிக்கிறார்கள். இந்த திருத்தலத்தின் வேதகால புராண நிகழ்வுகளும், இறைவனின் திருவிளையாடல்களும் இந்த உத்தரகோசமங்கை மண்ணில்தான் நடைபெற்று உள்ளது என்று இந்து சமய ஆன்மிக அறிஞர்கள் உறுதிபட நம்புகிறார்கள்.

திருஉத்தரகோசமங்கை கோவிலில் உள்ள சிவ லிங்கம் சுயம்புவாக உருவானது. ராமபிரா னின் மூதாதையர்களினால் உருவாக்கப்பட்ட இந்த கோவில் பகுதியில் முனிவர்களும், ரிஷிகளும் தங்கி இறைவனை வழிபட்டதாக கூறும் வரலாற்று நிகழ்வுகள் வேத வரிகளில் காணப்படுகிறது. இறை வழிபாட்டை துறக்காத 1000 முனிவர்கள் சிவபெருமானை துதிக்கவும், தவம் செய்யவும் இந்த இடத்தை தான் தேர்வு செய்தார்கள்.

மண்டோதரி

இந்த முனிவர்கள் திருஉத்தரகோசமங்கை தடாகத்தின் அருகே கடும் தவம் மேற்கொண் டனர். இவர்களின் தவத்தின் வலிமையை உணர்ந்த சிவ பெருமான் அசரீரியாக சொன் னார். தவசேஷ்டர்களே பெண்ணின் நல்லாள், மண்ணு புகழ் மண்டோதரி என்னை (சிவன்) பாலக வடிவில் காண இலங்கையில் கடும் தவம் புரிந்து வருகிறாள். அவளுக்கு காட்சியளித்து விட்டு திரும்பி வருகிறேன். இதற்கிடையே மண்டோதரியின் கணவன் இலங்கை அரசன் ராவணன் என் உடலை தீண்டினால் அப் போது இந்த தடாகத்தில் அக்னி ஜுவாலை பற்றி எரியும். இவ்வாறு அசரீரி ஒலித்தது.

தவத்தில் திளைத்திருந்த மண்டோதரி சிவனை பாலகனாக காண விரும்பியதால் மண்டோதரி முன்பு ஆதிசிவன் முத்துமணி பல்லக்காக முளைத் தெழுந்த சிறுகீரையாக தத்துங்கிளி போல் தோன்றி னார். பலவண்ண பாலகன் தத்தி, தத்தி நடந்து செல்வதை கண்டு மண்டோதரி உள்ளத்தில் உவ கை பொங்கியது. சிறுவனின் வண்ண வடிவழகில் எண்ணத்தை பறிகொடுத்து சிலையாக நின்றாள். அப்போது அங்கு வந்த ராவணன் குழந்தையின் அழகில் உள்ளத்தை பறிகொடுத்து வாரி அணைத்து மகிழ்ந்தான். அப்போது அதே நேரத்தில் உத்தர கோசமங்கை தடாகத்தில் அக்னி ஜோதி எழுந்தது. முனிவர்கள் இந்த ஜோதியில் கலந்தார்கள்.

மாணிக்கவாசகர்

1000-ம் முனிவர்களில் ஒருவர் மட்டும் அக்னி குழம்பில் விழாமல் ஆகம வரிகளை கற்றுணர்ந்த வண்ணமாக இருந்தார். அவர் தான் பின்னாளில் மாணிக்கவாசகராக அவதரித்து திருஉத்தரகோச மங்கை தலத்தில் நாளெல்லாம் பரமனை பாடி பரவசமடைந்தார் என்று புராணங்களில் கூறப்படு கிறது. மாணிக்கவாசகர் அவரின் திருவாசக திரு மறையில் 38 இடங்களில் திருஉத்தரகோசமங் கையை பாடி அங்கு உறையும் இறைவனையும், இறைவியையும் வணங்கிஉள்ளார். ஆதி காலத்தில் எப்படி தன்னை காண கடும் தவம் மேற்கொண்டு அக்னி ஜுவாலையில் ஐக்கியமான 999 முனிவர்க ளும் இறைவனோடு கலந்தார்களோ அதேபோல மாணிக்கவாசகரையும் இறைவன் ஆட்கொண்டார்.

இலங்கையில் இருந்து திரும்பி வந்த சிவன் அக்னியில் கலந்த அனைத்து சீடர்களையும் எழுப்பி அவர்களுக்கு சிறப்பு செய்ய அவர்களோடு ஐக்கிய மாகி திருஉத்தரகோசமங்கையில் சகஸ்ரலிங்கமாக (1008 லிங்கம்) காட்சி தருகிறார் என்று புராணங்க ளில் கூறப்படுகிறது. இவ்வளவு புராண புகழ் பெற்ற இந்த கோவிலின் தல விருட்சம் இலந்தை மரம். காலங்கள் கடந்த இந்த மரம் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

அபூர்வ மரகத சிலை

இந்த கோவிலின் நவரத்தினங்களில் ஒன்றான பச்சை மரகத கல்லினால் ஆன ஆளுயர ஆடும் திருக்கோலத்தில் உள்ள விலை மதிக்க முடியாத அபூர்வ நடராஜர் சிலை உள்ளது. தமிழர்களின் கலைத்திறனுக்கும் நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளுக்கும், கட்டி யம் கூறும் வகையில் கண்கவர் காட்சியளிக்கும் அபூர்வ சிலை இது. ஒளி வெள்ளத்தில் சிலையை உற்றுப்பார்த்தால் சிலை உயிரோடு உள்ளது போல தோன்றும். உடலில் பச்சை நரம்புகள் எப்படி கண்ணுக்கு தெரிகிறதோ, அப்படி அந்த சிலையிலும் தெரிகின்றன.

நவரத்தினங்களில் ஒன்றான பச்சை கல் இயல் பாகவே மென்மையானது. ஒளி, ஒலி அதிர்வுகளை தாங்க முடியாத தன்மை உடையது. இதன் காரண மாக மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்று சொல்வார்கள். எனவே இந்த நடராஜர் சிலையை ஒளி, ஒலி அதிர்வுகளில் இருந்து அந்த சிலை முழுவதும் சந்தன கலவையை பூசி பாதுகாத்து வருகிறார்கள். வருடத்தில் ஒருநாள் அதுவும் சிவ னுக்கு உகந்த நாளான திருவாதிரை நாளில் மட்டும் பக்தர்களின் தரிசனத் திற்காக சந்தன கவசம் களையப்படும்.

ஜனவரி 5-ந்தேதி

இதன்படிவருகிற 4-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் மரகத நடராஜரின் பூசப்பட்டுள்ள சந்தனம் களையப்படுகிறது. இதைத் தொடர்ந்து இரவு வரை நடராஜருக்கு பல்வேறு அபிஷேக ஆராதனை கள் நடைபெறும். இரவு 10 மணிக்கு ஆருத்ரா அபிஷேகம் நடக்கிறது. 5-ந்தேதி ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. பின்னர் நடராஜர் மீது மீண்டும் சந்தனம் பூசப்பட்டு தீபாராதனை நடைபெறும். விழாவையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். விழா ஏற்பாடுகளை ராணி பிரம்ம கிருஷ்ண ராஜேசுவரி உத்தரவின் பேரில் திவான் மகேந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர். விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஊராட்சி தலைவர் நாகராஜன் மற்றும் உறுப்பினர்கள் செய்துள்ளனர்.